Sunday, September 24, 2017

முஹர்ரம் மாதம்


Image result for ‫فضائل محرم الحرام‬‎

முஹர்ரம் மாதம்
முஹர்ரம் மாதம்: இஸ்லாமிய ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதமாகும். இம்மாதத்தின் முதல் நாள் இஸ்லாமிய புத்தாண்டின் துவக்கநாளாகும். முஹர்ரம் என்ற சொல்லுக்கு இரு பொருளுண்டு. ஒன்று, கண்ணியமானது என்று பொருள். இம்மாதத்தின் பத்தாம் நாளில்தான்பல நபிமார்கள் தத்தமது சோதனை சுரங்கங்களில் இருந்து சாதனை சிகரமடைந்தார்கள். இரண்டு, விலக்கப்பட்டது என்பது பொருள். காரணம், அன்றைய அரபு மக்கள் வருடத்தில் நான்கு மாதங்களை புனிதமானவை எனக்கருதி போர் செய்வதிலிருந்து விலக்கி வைத்தனர்.


அருளாளன் அல்லாஹூத ஆலா அல்குர்ஆனில் இதைப்பற்றி அழகுற கூறியுள்ளான். "நிச்சயமாக அல்லாஹ்விடம் மாதங்களின் எண்ணிக்கை ஓர் ஆண்டிற்கு பன்னிரண்டுதான். இவ்வாறு அவன் வானங்களையும் பூமியையும் படைத்த நாளில் விதித்தான். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் "அல்குர்ஆன் (9:36)

இவ்வசனத்திற்கொப்ப சங்கைக்குரிய மாதங்களில் இந்த முஹர்ரம் மாதமும் ஒன்று. ஆனால் முஸ்லிம்களின் வாழ்வில் ஹிஜ்ரா காலண்டரை பயன்படுத்தும் வழக்கம் குறைந்து கொண்டே வருகிறது. இது ஆரோக்கியமானதல்ல. ஹிஜ்ரா காலண்டருக்கும் முஸ்லிம்களுக்குமான தொடர்பு நோன்புக்கான ஒருமாதத்துடன் சுருங்கிப்போய்விட்டது. நோன்பை முடிவு செய்வதற்கும், பெருநாட்களை தீர்மானிப்பதற்கு மட்டுமே அது தேவைப்படுகிறது. முஸ்லிம்களின் திருமண பத்திரிக்கைகளில் அடைப்புக்குறியில் ஹிஜ்ரி முடங்கிப்போனது. அதற்கு காரணம் நாம் நம்மின் புத்தாண்டின் மாண்பை உணராதாதே!!! புதியதொரு இஸ்லாமிய வருட மான முஹர்ரம் மாதத்தை முதலாகக் கொண்டு ஆரம்பிக்கும் இஸ்லாமியப் புத்தாண்டு தூய பிரகடனத்தை ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது. நடப்பு வருடத்தில் செய்த பாவங்களையும் தவறுகளையும் எண்ணி மனம் வருந்தி அவற்றுக்காக அல்லாஹ்விடத்தில் மன்னிப்புக்கோரி அவற்றை அழித்துவிட்டு புதியதொரு வருடத்தை ஈமானிய உணர்வுகளோடு வரவேற்று இஸ்லாத்துடன் பின்னிப்பிணைந்த வாழ்க்கைக்கான திட்டத்தைத் தீட்டிக் கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) மக்காவிலிருந்து மதீனாவில் குடியேறிய நிகழ்ச்சியை (ஹிஜ்ரத்தை) அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம்களின் வருடக்கணக்கு கணிக்கப்பட்டுள்ளது. எனவே, இதனை ஹிஜ்ரி என்று அழைக்கின்றனர். அல்லாஹ்வின் அருட்கொடையால் நாம் ஹிஜ்ரி 1438 கடந்து ஹிஜ்ரி 1439-ல் காலடி வைக்க போகிறோம். ஹிஜ்ரத் நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டே வருடத்தின் ஆரம்ப மாதமாக முஹர்ரம் கணிக்கப்படுகிறது. ஆங்கில, தமிழ், சிங்கள வருடங்கள் சூரிய சுழற்சி யைக் கொண்டு கணிக்கப்பட்டாலும் சந்திர சுழற்சியின் மூலமாகவே முஸ்லிம்களின் வருடங்கள் கணிக்கப்படுகின்றன. இது இஸ்லாமிய வருடத்தின் தனித்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. ஆனால் அனைத்தும் 12 மாதங்களைக் கொண்டவை.

முஹர்ரம் மாதமும் அது தரும் பாடமும்: அல்லாஹ் உலகத்தை படைத்து மனிதர்களுக்கு காலங்களை கணித்துக் கொள்வதற்காக பன்னிரண்டு மாதங்களாக ஆக்கினான். இந்த மாதங்களில் சில மாதங்களை சிலதை விட்டும், சில நாட்களை சிலதை விட்டும், மேலும் சில நேரங்களை சிலதை விட்டும் வணக்க வழிபாடுகள் மூலம் சிறப்பாக்கினான். இதன் மூலம் மனிதன் அதிகம் நற்செயல்கள் செய்யவேண்டும் என்பதும் அவனது அந்தஸ்து நற்செயல்களால் உயர்த்தப்பட வேண்டும் என்பதும் ஒரே நோக்காகும். இத்தகைய சிறப்பான மாதங்களில் முஹர்ரம் மாதமும் ஒன்றாகும். வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். அவற்றுள் நான்கு மாதங்கள் புனிதமானவை ஆகும். (அல்-குர்ஆன் 9:36) எனத் திருமறை கூறுகிறது. அவை துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய மாதங்களாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வானங்களையும் பூமியையும் படைத்தது முதல் காலம் சுழன்று கொண்டிருக்கின்றது. ஒரு வருடத்தில் பன்னிரண்டு மாதங்கள் உள்ளன. அவற்றில் நான்கு புனிதமானவையாகும். அதிலும் மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக வருகின்ற துல் கஃதா, துல் ஹிஜ்ஜா, முஹர்ரம் மாதங்களாகும். அடுத்தது ஜமாதுல் ஊலாவுக்கும் ஷஃபானுக்கும் மத்தியில் இருக்கின்ற ரஜப் மாதமும் ஆகும்” (ஆதாரம்: புகாரி)

மேற்குறிப்பிடப்பட்ட ஆதாரங்கள், புனிதமான மாதங்கள் நான்கு என்பதனை தெளிவு படுத்துகின்றது. அவை: 1) துல் கஃதா, 2) துல் ஹிஜ்ஜா, 3) முஹர்ரம், 4) ரஜப் எனப்படும் மாதங்களாகும். இம்மாதங்களுக்கு இருக்கக்கூடிய புனிதத்துவத்தை நாம் பாதுகாக்க வேண்டும். இம்மாதங்களில் பேணவேண்டிய சில ஒழுங்கு முறைகளை இஸ்லாம் நமக்கு தெளிவுபடுத்தி தருகின்றது. ஹுரும் என்ற அரபுச்சொல் தடுக்கப்பட்டவை, புனிதம் என்ற பொருள்களை உள்ளடக்கி இருக்கின்றன.

அல்லாஹ் புனிதமாக்கிய மாதங்களில் ஒன்று முஹர்ரம் மாதமாகும். அதனை நபி (ஸல்) அவர்கள் நமக்கு அறிவித்துள்ளார்கள். அல்லாஹ் புனிதப்படுத்தியதைப் பேணுவது நம் கடமையாகும். மேலும் அல்லாஹ் கூறுகின்றான் ''அதில் உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள் '' (9:36).

புனிதம் மிக்க மஸ்ஜிதுல் ஹராமில் குற்றமிழைப்பது எவ்வளவு குற்றமோ அதுபோன்றே புனிதமிக்க மாதங்களில் தவறிழைப்பதும் பெரும் குற்றமாகும். எனவே மற்ற மாதங்களைக் காட்டிலும் அதிகமாகப் புனிதமிக்க மாதங்களைப் பேணுதல் அவசியம் ஆகும்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ரமழான் மாத நோன்புக்கு பின் சிறந்த நோன்பு முஹர்ரம் மாத நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பின் சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும்" (ஆதாரம்: முஸ்லிம்)

முஹர்ரம் மாதத்தின் சிறப்பு: இம்முஹர்ரம் மாதம் அல்லாஹ்வின் மாதம் என எம்பெருமானார் (ஸல்) அவர்களால் புகழ்ந்துரைக்கப்பட்ட சிறப்புமிகு மாதம் ஆகும். முஹர்ரம் மாதத்திற்கென்று பல்வேறு தனிச்சிறப்புக்கள் உள்ளன. அவற்றில் தலையாயவை இரண்டாகும். இம்மாதம் இஸ்லாமிய வருடப்பிறப்பின் ஆரம்ப மாதமாகும். இம்மாதத்தின் 10-ம் நாள் இறைத்தூதரான மூஸா (அலை) அவர்களையும் அவர்களின் சத்திய அழைப்பிற்கு செவிசாய்த்து, ஏக இறைவன்மீது நம்பிக்கைக் கொண்ட சமூகத்தினரையும் (பனூ இஸ்ரவேலர்), அவர்களை அழித்தொழிக்கப் புறப்பட்ட ஃபிர்அவ்னிடமிருந்து வல்ல இறைவன் பாதுகாத்த நாளாகும்.

"ரமலான் நோன்பிற்குப் பிறகு சிறந்த நோன்பு அல்லாஹ்வுடைய மாதமாகிய முஹர்ரத்தின் நோன்பாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரலி) அவர்கள். நூல்: முஸ்லிம். மேற்கண்ட ஹதீஸில் இம்மாதத்தை அல்லாஹ்வின் மாதமாக நபி (ஸல்) அவர்கள் சிலாகித்துக் குறிப்பிடுகின்றார்கள். மட்டுமல்ல, முஹர்ரம் மாதம் 9 (தாசுஆ) மற்றும் 10 (ஆஷுரா) ஆகிய இரு தினங்களில் அனுசரிக்கப்படும் நோன்புகள் ரமலான் மாத நோன்புகளுக்கு அடுத்தபடியான சிறந்த நோன்புகளாக நபி (ஸல்) அவர்களால் இங்கு அடையாளப் படுத்தப்படுகிறது.

ஆஷூரா நோன்பைப்பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. (அதற்கு), "சென்ற வருடத்தின் பாவங்களுக்கு (அது) பரிகாரமாக அமையும்" என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அபூகதாதா(ரலி), நூல்: முஸ்லிம். ஒரு வருட பாவங்களுக்குப் பரிகாரமாக விளங்கும் இந்த ஆஷூரா தினம் என்பது முஹர்ரம் மாதத்தின் 10-ம் நாள் என்பது அனைவரும் அறிந்த விஷயமே.

"மூஸா (அலை) அவர்களைப் பெருமைப் படுத்துவதற்கு யூதர்களைவிட நான் அதிகத் தகுதி வாய்ந்தவன்" எனக் கூறி அவ்வருடம் முஹர்ரம் 10 அன்று நோன்பு நோற்ற நபி (ஸல்) அவர்கள், "எதிர்வரும் வருடம் (உயிருடன்) இருந்தால் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன்" (அறிவிப்பவர் :இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள். நூல்: முஸ்லிம்.) எனக்கூறிச் சென்றார்கள்.

முஹர்ரம் மாதத்தின் படிப்பினை: நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உயிரோடு இருந்து முஹர்ரம் 10 அன்று மட்டும் நோன்பு வைத்திருந்தாலும் அவர்களின் எண்ணத்திற்கியைந்து 9 மற்றும் 10 ஆகிய இரு தினங்களில் ஆஷூரா நோன்பு வைக்கும் முஸ்லிம் சமூகம் அதன் பின்னணியில் உள்ள நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உறுதியான சமுதாய சிந்தனையைக் குறித்து ஆழமாகச் சிந்திப்பதில்லை.

நபி (ஸல்) அவர்கள், "அடுத்த வருடம் உயிருடன் இருப்பின் 9 அன்றும் நோன்பு வைப்பேன்" என்று ஏன் கூறினார்கள்? அதற்கு நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் விரவிக்கிடக்கும் பல்வேறு நிகழ்வுகள் தெளிவான பதிலைத்தருகின்றன. யூத சமுதாயம் என்பது, உலகில் பல சமூகங்களை நேர்வழிப்படுத்த இறைவனால் அனுப்பப்பட்ட நபிமார்களின் எண்ணிக்கையை வைத்து மிகவும் அதிகமான நபிமார்களைப் பெற்றுக் கொண்ட சமுதாயமாகும். எனினும் தங்களுக்கு அனுப்பப்பட்ட பல நபிகளை நிராகரித்தது மட்டுமன்றி அவர்களுக்கு அனுப்பப்பட்ட நபிகளுள் அதிமானோரைக் கொடூரமாகக் கொலையும் செய்தவர்கள் யூதர்களாவர். இதனால் இறைவனின் கடும் சினத்திற்குரியவர்களாகி இறைவனால் சபிக்கப்பட்ட கூட்டமாக, இறைவனின் தீர்ப்பை எதிர்நோக்கி இருக்கும் கூட்டமாக அவர்கள் இருக்கின்றனர். இந்தக் காரணத்தினால் எப்பொழுதுமே தம்முடைய செயல்களில் எதுவும் யூதர்களுக்கு ஒப்பாக எவ்விஷயத்திலும் இருந்து விடக்கூடாது என்பதில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதிக சிரத்தை எடுத்துக் கொண்டனர். அதோடு தன் தோழர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் யூதர்களுக்கு மாறு செய்யும்படி வலியுறுத்தவும் செய்தனர். இதற்கு உதாரணமாகப் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளைக் குறிப்பிடலாம். அவற்றில் ஒன்றுதான் இந்த ஆஷூரா 9ஆம் நாள் நோன்பும். எவ்விஷயத்திலும் யூதர்களின் செயலுக்கு, தான் ஒப்பாக இருந்து விடக்கூடாது என்பதில் கவனம் செலுத்திய நபி (ஸல்) அவர்கள் நன்மைகள் செய்வதிலும் நன்றி செலுத்துவதிலும் அவர்களைவிட மேலதிகமாக இருக்கும் முகமாக ஆஷூரா 9 அன்றும் நோன்பு வைக்க விழைந்தார்கள். இவ்வாறு தமது ஒவ்வொரு அசைவிலும் மாற்றாரின் கலாச்சாரத்தைப் பின்பற்றிவிடக்கூடாது என்பதில் நபி (ஸல்) அவர்கள் கவனமாக இருந்ததன் காரணம், இஸ்லாமியக் கலாச்சாரம் எவ்விதத்திலும் மற்ற கலாச்சாரங்களோடு ஒன்றி அழிந்து விடக்கூடாது; தனித்தன்மையும் திகழவேண்டும் என்று கருதியேயாகும்.

ஆஷூராவின் சிறப்பு: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது யூதர்கள் ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்று வந்ததைக் கண்டனர். அது பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யூதர்களிடம் வினவிய போது மூஸா (அலை) அவர்களையும், இஸ்ரவேலர்களையும் அவர்களின் எதிரி (பிர்அவ்ன்) இடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய சிறந்த நாளாகும்என்று யூதர்கள் காரணம் கூறினர். உங்களை விட மூஸா (அலை) அவர்களுக்கு நான்தான் அதிக உரிமை உள்ளவன் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறி, அன்று நோன்பு வைக்குமாறும் உத்தரவிட்டனர். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி) நூல்கள்: புகாரி 3397, முஸ்லிம்.
இந்தக் கட்டளை மூலம் ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்பது கட்டாயக் கடமை என்று தெரிந்திருந்தாலும் ஆஷுரா நோன்புக் கட்டாயக் கடமை அல்ல. காரணம் நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது ரமழான் நோன்பு கடமையாக்கப்படாத நேரத்தில் இந்த நோன்பைக் கடமையாக ஆக்கி இருந்தனர். ரமழான் நோன்புக் கடமையாக்கப்பட்டபின் ஆஷுரா நோன்பைக் கட்டாயம் நோற்க வேண்டும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வலியுறுத்தவில்லை.

நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்கும்படி கட்டளையிட்டிருந்தனர். ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின், “விரும்பியவர் இந்த ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்கட்டும்! விரும்பாதவர் விட்டு விடலாம்என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரழி) நூல்கள்: புகாரி 1592, முஸ்லிம். இதே கருத்தை முஆவியா(ரழி) அவர்களும் அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்)

ஆஷுரா தினத்தை யூதர்கள் கண்ணியப்படுத்தி நோன்பு நோற்கின்றனர்என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சில நபித்தோழர்கள் கூறியபோது, “அடுத்த ஆண்டு நான் உயிரோடு இருந்தால் (யூதர்களுக்கு மாற்றமாக) ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன்என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால் அடுத்த ஆண்டு இந்த தினத்திற்கு முன்பே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வபாத்தாகி விட்டார்கள்.அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி) நூல்கள்: முஸ்லிம் 1916, 1917, அஹ்மத், அபூதாவூது.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஆஷூரா எனும் இந்த நாளையும் (ரமலான்) என்னும் இந்த மாதத்தையும் தவிர வேறெதையும் ஏனையவற்றை விடச் சிறப்பித்து தேர்ந்தெடுத்து நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை. நூல்: புகாரி 2006

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை அதற்கு முந்தைய ஓராண்டின் பாவத்திற்குப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன். அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி) நூல்: முஸ்லிம் 1976

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஆஷூரா நோன்பு பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு, அது கடந்த ஆண்டின் பாவத்திற்குப் பரிகாரமாகும என்றார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி) நூல்: முஸ்லிம் 1977 மேற்கூறிய நபிமொழிகள் மூலம் முஹர்ரம் மாதம் ஒன்பதாம் நாளும், பத்தாம் நாளும், நோன்பு ஸுன்னத் என்பதை நாம் உணரலாம்.
கர்பலா: இற்றைக்கு1400 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சோக நிகழ்வு அது. நீதியும் அநீதியும் சத்தியமும் அசத்தியமும் மோதிக் கொண்ட நாள் அது.
மனச்சாட்சிகளை உருகவைக்கும் அந்த நிகழ்வுதான் கர்பலா நிகழ்வு. ஹிஜ்ரி 61-ஆண்டு அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பேரர் இமாம் ஹூசைன் (ரலி) அவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் பனீ உமையா கூட்டத்தினரால் கர்பலா எனும் பாலைவனத்தில் மிகபரிதாபகரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்கள். நபியவர்களினதும், தோழர்களினதும் அளப்பெரிய தியாகங்களுக்கும் அயராத உழைப்பிற்கு மத்தியில்; வளர்த்தெடுக்கப்பட்ட புனித இஸ்லாம், உமையாக்களினால் மாசுபடுத்தப்பட்டது. குர்ஆனின்; விளக்கங்களும் நபியவர்களின் சுன்னாவும் அக்கொடியவர்களின் ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் சாதகமாக வியாக்கியானம் செய்யப்பட்டன.
அநீதிகளும் அனாச்சாரங்களும் இஸ்லாத்தின் பெயரால் அரங்கேற்றப்பட்டன. இஸ்லாமிய நல்லொழுக்கங்களும் அதன் பெருமான விழுமியங்களும் சிதைக்கப்பட்டு சீரழிக்கப்பட்டன. நபியவர்களின் மார்க்கம் அழிக்கப்படும் அந்த அபாயகர நிலையை கண்டு அதனைப்பாதுகாக்கும் முழுநோக்குடன் இமாம் ஹூசைன் (ரலி) அவர்கள் கர்பலா நோக்கி புறப்பட்டார்கள். அவர்கள் தனது பயனத்தின் நோக்கம் பற்றிக்கூறுகையில் நான் சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த இப்பயனத்தை மேற்கொள்ளவில்லை. எனது பாட்டனாரினது மார்க்கத்தில் சீர்திருத்தத்தை மேற்கொண்டு நன்மையை ஏவி தீமையைத்தடுக்கவே இதனை செய்கிறேன்எனக் கூறினார்கள். நபியவர்களின் மார்க்கம் யஸீதினால் குழிதோன்றி புதைக்கப்படுவதை சகித்துக்கொள்ளாத இமாம் ஹூசைன் அவர்கள் தனது குடும்பத்தாருடனும் தனது போராட்டத்திற்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்த வாக்கு மீறாத தோழர்களுடனும் கர்பலாவுக்கு வருகை தந்து அநியாயக்காரர்களுடன் போராடி தனதுயிரையும் தனது குடும்பம் மற்றும் தோழர்களின் உயிர்களையும் அல்லாஹ்வின் பாதையிலே தியாகம் செய்தார்கள்.
நபி (ஸல்) அவர்களின் பேரப்பிள்ளையான ஹுஸைன் (ரலி) அவர்களின் மரணம் (கொலை) யஸீத் பின் முஆவியா என்பவரால் நடத்தப்படுகின்றது. யஸீத் பின் முஆவியா தனி மனிதராக நின்று இந்த காரியத்தில் ஈடுபடவில்லை. அந்ந சம்பவம் நடக்கும் போது சம்பவம் நடந்த கர்பலா பகுதியில் யஸீத் பின் முஆவியா என்பவரே ஆளுனராக இருந்தார். அவருடைய ஆளுமைப் பகுதிகளுக்கு எதிராகவும் அவரது அதிகாரத்துக்கு எதிராகவும் நடந்தேறிய குழப்பங்களிலேயே ஹுஸைன் (ரலி) அவர்கள் கொல்லப்படுகிறார்கள். (முஹர்ரம் 10 நாள் இந்த சம்பவம் நடக்கின்றது)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அன்புக்கும் அளவுகடந்த நேசத்துக்கும் உரிய பேரரான இமாம் ஹுஸைன் (அலை) அவர்களும், பெண்கள் சிறுவர்கள் அடங்கிய அவர்களது உறவினர்களும் உமையா ஆட்சியாளனான யசீதினால் கர்பலாத் திடலில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, ஈட்டி முனையில் சிரசுகள் குத்தி உயர்த்தப்பட்டு ஊர்வலம் எடுத்துச் செல்லப்பட்ட ஒரு கோரமான நிகழ்வை எதிர்கொண்ட கசப்பான அனுபவம் இந்த முஹர்ரம் மாதத்துக்கு உண்டு.

வரலாற்றிலே ஒரு திருப்புமுனையாக அமைந்து, குறிப்பிட்டதொரு சகாப்தத்தையே உருவாக்கிய கர்பலா நிகழ்வில் பின்னிப் பிணைந்து காணப்படும் இமாம் ஹுஸைன் (அலை) அவர்களின் வாழ்க்கைத் தடங்கள் மிகுந்த அனுதாபத்திற்குரியனவாகும்.
இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள், சிறந்த சிந்தனையுடையோராயும் துணிச்சல் மிக்கோராயும் துன்பங்களையும் ஆபத்துகளையும் எதிர்நோக்கும் வல்லமை பெற்றோராயும் விளங்கினார்கள். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் உயிரையே இழக்க நேரிட்டாலும் அசைக்க முடியாத மனவுறுதியோடு எதையும் தாங்கும் மனத்திண்மை படைத்தோராய்த் திகழ்ந்தார்கள். இஸ்லாமியக் கொள்கைகளை, கோட்பாடுகளைக் காப்பாற்றிக் கொள்வதிலே அன்னார் காட்டிய வீரமும் மனவுறுதியும் சரியான தீர்மானங்களும் சிலாகிக்கத்தக்கவை.
வெறும் அரசியல் நோக்கிற்காக அல்லாமல், தூர்ந்து செல்லும் இஸ்லாமியத்தைப் பாதுகாக்கும் உயர் இலட்சியத்துடன் இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள், இந்நிகழ்வில் பங்கேற்றார்கள். ஆட்சியாளர்களை சீர்திருத்தம் செய்வதற்கு சமாதான முயற்சியைப் பயன்படுத்த முனைந்தார்கள். ஆனாலும், நிராயுதபாணியாக நின்ற அவர்களை, உமையாக்கள் கொடூரமாகக் கொன்றனர். தமது ஆட்சிக்கு எதிரான, அல்லது தமது ஆட்சியை விரும்பாத சக்திகளைக் களையும் உமையாக்களின் திட்டத்திற்கு இமாம் ஹுஸைனும் பலியாகிப் போனார்கள்.
ஹிஜ்ரத் கிபி 622 –ல் முஹ்ம்மது மக்காவிலிருந்து யஸ்ரிப் என்ற மதீனாவிற்கு புலம்பெயர்ந்தார். இதை ஹிஜ்ரத் என்றும், அன்றிலிருந்து புதிய சகாப்தத்துடன், இஸ்லாமியக் காலக்கணக்கு துவங்குவதாக கூறுவதையும் நாம் அறிவோம்.
ஹிஜ்ரத் என நாம் வழமையாக அழைக்கும் வரலாற்று உண்மைகள் முஸ்லிம் பொதுமக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபல்யமானவை. இறைதூதர்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தலைமையில் ஒரு சிறு கூட்டத்தினர் மக்காவிலிருந்த தம் வீடுகளை விட்டு மதீனாவுக்குப் புலம் பெயரும் நிர்ப்பந்தத்திற்குட்பட்டனர். அக்கூட்டத்தினர் தம்மிடமிருந்த அனைத்து சொத்துக்களையும் விட்டுசென்றனர்.
ஹிஜ்ரி காலண்டரும் உலகின் ஏனைய காலண்டர்களும்: இன்றைய உலகில் 40 காலண்டர்கள் (நாட்காட்டி) உபயோகத்தில் உள்ளன. பண்டைக்காலத்தில் எகிப்து மக்கள் பெரும்பாலும் செப்டம்பர் மாதத்தை புதுவருடமாக கருதினர்.
பாபிலோனியர்கள் வசந்த காலத்திலேயே புதுவருடத்தைக் கொண்டாடி வந்தனர். ரோமானியர்கள் நீண்ட காலமாக புதுவருடமாக கருதினர். இவர்களே கலண்டரை வடிவமைப்புச் செய்தவர்கள். அப்போது வருடத்திற்குப் பத்து மாதங்களே வரையறை செய்தனர்.
மார்ச் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை அவை அமைந்திருந்தன. பின் கி.மு. 713 -ல்தான் ஜனவரியும் பிப்ரவரியும் லீப் வருடமும் சேர்க்கப்பட்டன.
அப்போதும் மார்ச்சிலேயே துவங்கிவந்த வருடம் கி.மு.இரண்டாம் நூற்றாண்டில் தான் ஜனவரி 1 முதல் துவங்கும் படி மாற்றப்பட்டது. இது உரோமானியர்களின் கடவுளான ஜோன்ஸ் நினைவாக ஆண்டின் முதல் மாதத்திற்கு ஜனவரி என்று பெயர் சூட்டினர். அதற்குப் பின்னரே ஜூலியஸ் சீஸர் கொண்டு வந்த ஜூலியன் காலண்டர் தான் பல நூற்றாண்டுகளாக வழக்கத்தில் இருந்து வந்தன. அங்கும் கூட பல நாடுகள் கிறிஸ்துமஸ்ஸிலிருந்தும் ஈஸ்டர் தினத்திலிருந்தும் புத்தாண்டைத் துவக்கும் வழக்கமிருந்தது. ஐரோப்பியர்களும் கி.பி,1582 ஆம் ஆண்டுகளுக்கு முன்புவரை மார்ச் மாதத்தையே ஆண்டின் முதல் மாதமாக கொண்டாடினார்கள். சீனா மற்றும் வியட்நாம், நாடுகள் தங்கள் புத்தாண்டை ஜனவரி 21ஆம் தேதியில் கொண்டாடி வருகின்றனர். பிப்ரவரியில் திபெத்தினதும் மார்ச்சில் ஈரான் புத்தாண்டும் மலர்கின்றது. ஏப்ரல் மாததில் தமிழ, தெலுங்கு, பஞ்சாபி, கேரளா, பெங்காலி, மற்றும் சிங்கள புத்தாண்டுகள் மலர்கின்றன. அதேபோல் நேபாளம் தாய்லாந்து முதலியனவும் ஏப்ரல் மாதத்திலேயே புதுவருடத்தைக் கொண்டாடுகின்றன. அக்டோபர்- நவம்பரில் தீபாவளி தினத்தில் குஜராத்தி ஆண்டு மலர்கின்றன.

இது தவிர ஹிஜிரி எனப்படும் இஸ்லாமிய ஆண்டு மொகரம் எனப்படும் அரபி மாதத்தில் துவங்கும் ஹிஜிரி ஆண்டு கிறிஸ்தவ காலண்டரை விட குறைவான நாட்களைக் கொண்டது. இது 12 மாதங்களைக் கொண்டிருந்தாலும் ஆண்டின் மொத்த நாட்கள் 354 ஆக உள்ளது. காரணம் இது பிறையை அடிப்படையாகக் கொண்டு அமைகின்றது. எனவே இஸ்லாமிய ஆண்டு கொஞ்சம் வேகமாகவே நடைபோடுகின்றது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்த வரை இந்த ஹிஜ்ரி ஆண்டு இருந்ததில்லை. மேலும் ஆண்டின் முதல் மாதம் என்பது முஹர்ரம் என்றும் இருக்கவில்லை. நபிகளாரின் காலத்தில் யானை ஆண்டு என்றே குறிப்பிட்டு வந்தனர்.
"
நானும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் யானை ஆண்டில் பிறந்தோம்'' என்று கைஸ் பின் மக்ரமா (ரலி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். (நூற்கள்: திர்மிதீ 3552, அஹ்மத் 17218)
அபூமூஸா (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் "உங்களிடமிருந்து கடிதம் வருகிறது; ஆனால் அதில் காலம் குறிப்பிடப் படுவதில்லை' என்று கூறியிருந்தார். அப்போது உமர் (ரலி) அவர்கள் மக்களை ஒன்றிணைத்தார்கள்... என்ற செய்தியை ஹாகிம் அவர்கள் பதிவு செய்துள்ளார்கள் என்று ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (பத்ஹுல் பாரீ பாகம்:7, பக்கம்: 268)
இஸ்லாமிய ஆண்டை எதை அடிப்படையாக வைத்துப் பயன்படுத்துவது என்பதில் நான்கு கருத்துக்கள் மக்களிடம் இருந்தன. 1. நபிகளாரின் பிறப்பு, 2. நபிகளார் இறைத்தூதராக ஆன ஆண்டு, 3. நபிகளார் ஹிஜ்ரத் செய்த ஆண்டு, 4. நபிகளாரின் இறப்பு.
உமர் (ரலி) அவர்கள் மக்களை ஒன்றிணைத்து "வருடத்தை எந்த நாளிலிருந்து துவங்கலாம்?' என்று ஆலோசனை கேட்டார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் இணை வைப்பு பூமியை விட்டு விட்டு நாடு துறந்து சென்ற நாளை எடுத்துக் கொள்ளலாம்' என்றார்கள். அவ்வாறே உமர் (ரலி) அவர்கள் செய்தார்கள். அறிவிப்பவர்: ஸயீத் பின் முஸய்யப் நூல்: ஹாகிம் (4287)

இதில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பை தேர்வு செய்வதில் உமர் ரலி அவர்களுக்கு உடன்பாடில்லை. காரணம் அதில் கிருஸ்துவர்களின் தழுவல் உள்ளது.பிற மத தழுவல்களை இஸ்லாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. யூத கிருஸ்துவர்களுக்கு நீங்கள் ஒப்பாக வேண்டாம் என்றும் அப்படி ஒப்பான காரியத்தை செய்தவர் அவர்களை சார்ந்தவர் என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள். இதன் பின்னனியில் தான் பைதுல் முகத்தஸிலிருந்து கஃபதுல்லாவாக முஸ்லிம்களின் கிப்லா மாற்றப்பட்டது,சூரியனை வணக்கம் செய்யும் கூட்டத்தை கவனத்தில் கொண்டே சூரிய உதயம்,அஸ்தமம்,அதன் உச்சி பொழுது ஆகிய நேரங்கள் வணக்கம் செய்வது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டது.

வணக்கமானாலும் வாழ்கையானாலும் மற்ற சமயங்களின் சாயல் வரக்கூடாது என்பது இஸ்லாத்தின் கோட்பாடு. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இறப்பை தேர்வு செய்வதிலும் உமர் ரலி அவர்களுக்கு உடன்பாடில்லை, காரணம் நாயகத்தின் இறப்பு இந்த உம்மத்தின் இழப்பும் கைசேதமுமாகும்.அது இந்த உம்மத்தின் சோதனையான நாளாகும்.அதை தேர்வு செய்தால் வருடத்தின் ஆரம்ப தினத்தை துக்க தினமாக மாற்றி விடுவார்கள்.

நபித்துவத்தை தேர்வு செய்வதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றாலும், நபித்துவத்தின் நோக்கம் முழுமை பெற்றது ஹிஜ்ரத்தின் பின்னனியில்தான். ஆகவே ஹிஜ்ரத் தான் என் முடிவு என்றபோது மற்ற ஸஹாபாக்களும் அதை அங்கீகரித்தார்கள். எந்த மாதத்தை முதல் மாதமாகக் கணக்கிடுவது என்பதில் சிலர் ரஜப் என்றும் சிலர் ரமலான் என்றும் குறிப்பிட்டனர். உஸ்மான் (ரலி) அவர்கள் முஹர்ரம் என்று கூறினார்கள். "ஏனெனில் இந்த மாதம் கண்ணியமிக்க போர் தடைசெய்யப்பட்ட மாதம். மக்கள் ஹஜ் செய்து விட்டுத்திரும்பும்போது வரும் முதல் மாதம் முஹர்ரம்'' என்று குறிப்பிட்டார்கள். (பத்ஹுல் பாரீ: 7:268)
இந்த கருத்தே தேர்வு செய்யப்பட்டு நடைமுறை படுத்தப்பட்டது. நபித்தோழர்கள் வருடக் கணக்கை கணக்கிடுவதற்கு ஹிஜ்ரத்தைத் தேர்வு செய்ய திருக்குர்ஆனின் ஒரு வசனம் தூண்டுகோலாக இருந்ததாக சில அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மை யானவர்களை விரும்புகிறான். (அல்குர்ஆன் 9:108) "இந்த வசனத்தில் ஆரம்ப நாள் என்பது ஹிஜ்ரத்திற்குப் பின்னுள்ள ஆரம்ப நாளையே குறிக்கிறது. இவ்வாறு அல்லாஹ் குறிப்பிட்டுள்ளதால் இதுவே இஸ்லாமிய ஆண்டின் முதல் நாள் என உணர்த்தப்படுகிறது' என்று அறிஞர்கள் கருதுகின்றனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிஜ்ரத் செய்தது ரபீவுல் அவ்வல் மாதமாக இருந்தாலும், அவர்கள் மதீனாவுக்கு நாடு துறந்து போக வேண்டும் என்று உறுதி கொண்டது முஹர்ரம் மாதத்தில் தான். எனவே முஹர்ரத்தை முதல் மாதமாகத் தேர்வு செய்தார்கள். (பத்ஹுல் பாரீ, பாகம்:7, பக்கம்: 268)  இறுதியில் முஸ்லிம்களின் முதல் மாதமாக முஹர்ரம் மாதத்தையும் வருடம் ஆரம்பிப்பது நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்காவி லிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்ற நாள் என்றும் முடிவெடுத்தார்கள்.
தற்போது உலகம் முழுவதும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு பயன்படுத்தப்படும் ஆங்கிலக் காலண்டரினுடைய உண்மையான பெயர் க்ரகேரியன் காலண்டர் என்பதாகும். கி.பி 16ஆம் நூற்றாண்டில் கத்தோலியர்களின் போப்பாக இருந்த 13ஆம் போப் க்ரகேரி எனபவரின் தலமையில் கி.பி.1582 இல் வடிவமைக்கப்பட்டதே இந்தக்கலண்டராகும். இதுவே இன்று பொதுக் காலண்டராக உள்ளது. அவ்வளவு காலமும் கிறிஸ்துவின் பிறப்புடன் ஆரம்பமான வருடம் போப் க்ரகேரியன் என்பவரால் மாற்றியமைக்கப்பட்டன. அதன்படி இயேசு பிறந்த டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் தினம் என்றும். அவ்வாறு யேசுபிறந்து எட்டாவது நாள் அவர் தனது பெற்றோர்களால் இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டு அவர் ஞானஸ்தானம் பெற்ற நாளையே வருடத்தின் முதன்நாளாக ஆரம்பிக்க வேண்டும். ஜனவரி 1 என்று அமுல் செய்தார். போப் ஆரம்பித்து வைத்த காலண்டர் என்பதால் ஐரோப்பாவில் அரசர்கள் வாதம் பண்ணாமல் ஏனெனில் ஐரோப்பியர்கள் அனைவரும் கத்தோலிக்கர்களாக இருந்தனர். ஆகவே அவர்களும் போப் வடிவமைத்த கலண்டரையே உபயோகித்தனர். 18ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய ஆதிக்கம் ஆசியநாடுகளில் பரவியபோது இக் க்ரகேரியன் காலண்டரும் திணிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.  இன்று அதுவே உலகப் பொதுக் காலண்டராக்கப்பட்டது.
ஹிஜ்ரத்தை ஏன் தேர்வு செய்தார்கள்? ஹழ்ரத் உமர் ரலி அவர்கள் கூறிய காரணம் நபி (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் பயணம் தான் சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் பிரிவை காட்டியது. ஸஹாபாக்கள் கூறிய காரணம் அல்குர்ஆன் 9:108 ல் ஆரம்ப தினத்தில் தக்வாவின் மீது அஸ்திவாரமிடப்பட்ட பள்ளிவாசல் என்று ஹிஜ்ரத்தின் போது கட்டப்பட்ட குபா பள்ளியை குறித்து அல்லாஹ் கூறுகிறான்.  எதில் ஆரம்ப தினம்?முஸ்லிம்களுக்கு கண்ணியம் கிடைத்ததில்,முஸ்லிம் கள் பயமின்றி வணக்கம் செய்ததில்,பள்ளிவாசல் கட்டியதில் ஆகிய அனைத்தும் ஹிஜ்ரத்தின் பின் தான் நடைபெற்றது. எனவே அல்லாஹ்வே அவ்வல் யவ்ம் (ஆரம்ப நாள்) என்று கூறிவிட்டான் அதுவே ஆண்டின் துவக்கமாகுவதே பொருத்தமானது என ஸஹாபாக்கள் முடிவு செய்தார்கள்.
உண்மையில் ஹிஜ்ரத் முஸ்லிம்களுக்கான கண்ணியம் தேடிய பயணம்
மாத்திரமல்ல  முஸ்லிம்களுக்கான களம் தேடிய பயணமும் தான். எதிரிகளுக்கு பயந்து ஓடுவதல்ல,இந்த தீனை பாதுகாக்கவும்,முஸ்லிம்களின் துயர் துடைக்கவும்,இஸ்லாத்திற்கான அரசியல் களம் அமைக்கவும் தேவைப்பட்ட பயணம். இதன் நோக்கத்தை அல்லாஹ் திருமறையில் தெளிவுபடுத்துகிறான்.  நிராகரிப்போரின் வாக்கைக் கீழாக்கினான்; ஏனெனில் அல்லாஹ்வின் வாக்குத்தான் (எப்போதும்) மேலோங்கும் (அல் குர்ஆன் 9:40)

ஹிஜ்ரத் தான் இஸ்லாத்தின் இருப்பை உறுதி செய்தது,இஸ்லாம் வளர காரணமானது.அதனால் தான் அல்லாஹ் குர்ஆனில் ஈமான் கொண்டவர்ளே!என்ற வார்த்தையை பயன்படுத்தியது ஹிஜ்ரத்துக்கு பின் தான். எந்த இடங்களிலெல்லாம் يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا என்று வருகிறதோ அது மதீனாவில் இறக்கப்பட்டது என்று விளங்கிக்கொள்ளலாம். இதன் மூலம் ஹிஜ்ரத்துக்கும் ஈமானுக்கும் உள்ள தொடர்பை புரிந்து கொள்ள முடிகிறது.

அதுபோலவே முஸ்லிம்களை ஒன்றுபடுத்துகிற ஜும்ஆ தொழுகையும் ஹிஜ்ரத்திற்கு பின்பே கடமையாக்கப்பட்டது. ஹிஜ்ரத் நபிமார்களின் சுன்னத்தாகும். இப்பூவுலகில் முதன் முதலாக ஹிஜ்ரத் பயணத்தை மேற்கொண்ட கூட்டம் நபி நூஹ் அலை அவர்களின் தலைமையில் கப்பலில் பயணம் செய்த 80 முஃமின்கள். இதுவே இஸ்லாமிய வரலாற்றில் நிகழ்ந்த முதல் ஹிஜ்ரத் எனக் கருதப்படுகிறது. ஒவ்வொரு வகையிலிருந்தும் (ஆண் பெண் கொண்ட) ஒவ்வொரு ஜோடியை (அக்கப்பலில்) ஏற்றிக் கொள்ளும்; (மூழ்கடிக்கப்படுவார்கள் என்று எவர்களைக் குறித்து முன்பே நம்) வாக்கு ஏற்பட்டுவிட்டதோ அவர்களைத் தவிர் உம் குடும்பத்தாரையும், ஈமான் கொண்டவர்களையும் ஏற்றிக்கொள்ளும்" என்று நாம் கூறினோம்

 அடுத்து ஹிஜ்ரத் செய்தது இறைதூதர் நபி இப்றாஹீம் (அலை) அவர்களே! அன்னார் தமது துணைவியார் ஸாராவுடன் "ஹர்ரான்" என்ற ஊரிலிருந்து "பாலஸ்தீனம்" சென்று அங்கு குடியேறினார்கள். அதுபோல ஹழ்ரத் இப்ராஹீம் அலை அவர்கள் சிரியாவுக்கு,எகிப்துக்கு,  ஹிஜாஸ் பூமிக்கும் ஹிஜ்ரத் செய்ததாக குர்ஆன் கூறுகிறது. தீனை பாதுகாக்க இடம் பெயர்வதே ஹிஜ்ரத்தாகும். அவ்வாறு ஹழ்ரத் மூஸா அலை அவர்கள் நபித்துவத்தின் முன்பும் பின்பும் ஹிஜ்ரத் செய்ததாக குர்ஆன் கூறுகிறது. நபிமார்களுக்கு ஏகத்துவ எதிரிகளால் நெருக்கடிகள் வரும்போதெல்லாம் அல்லாஹுத்தஆலா ஹிஜ்ரத்தின் வாசலை திறந்துவைப்பான். அப்படியொரு நெருக்கடியை மக்கத்து காபிர்கள் நபி ஸல் அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் கொடுத்தபோது அல்லாஹ் ஹிஜ்ரத்திற்கான அனுமதி வழங்கினான்.

நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ, அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை (ஊரைவிட்டு) வெளியேற்றிவிடவோ நிராகரிப்போர் சூழ்ச்சி செய்ததை நினைவு கூறுவீராக அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்னையுடையவன். (அல் குர்ஆன் 8:30) சிறை பிடித்தல், கொலை செய்தல், நாடுகடத்தல் ஆகிய மூன்று கட்ட நெருக்கடி நாயகத்துக்கு ஏற்பட்டபோது அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு ஹிஜ்ரத் செய்ய அனுமதி வழங்கினான். தாம் கொண்ட கொள்கையின் அடிப்படையில் அசைக்க முடியாத விசுவாசத்தோடு செயலாற்றுவதை வலியுறுத்தும் இஸ்லாம் எனும் இனிய மார்க்கத்தை காப்பதற்காக அந்த மார்க்கம் போதிக்கும் அறநெறிகளை தம்மில் நிலைநிறுத்தி தாமும் செயற்படுவதோடு, அவற்றைத் தரணியில் தழைக்கச் செய்வதற்காக நாடு துறப்பதையே ஹிஜ்ரத் என்ற பதம் விளக்கி நிற்கிறது.
இவ்வகையில் இறைவனுக்காக இறைதூதர் மீது கொண்டிருந்த தூய அன்பிற்காக இறைவனும் இறைதூதரும் ஈந்தளித்த தீன்எனும் சன்மார்க்கத்திற்காக அன்றைய அரபகத்து முஸ்லிம்கள் தாம் பிறந்த புனித மக்கா நகரை மட்டுமல்ல தாம் பெற்ற மக்களை துறந்தார்கள். பெற்றோரையும் உற்றார் உறவினர்களையும் துறந்தார்கள். இறைத்தூதரின் நாடு துறந்தல் என்ற ஹிஜ்ரத்தை அடிப்படையாகக் கொண்டு துவங்கப்பட்டதுதான் முஸ்லிம்கள் பயன்படுத்தி வரும் ஹிஜ்ரி ஆண்டு. இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வாழ்விலும் இஸ்லாமிய வரலாற்றிலும் மிகப் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியதுதான் இந்த ஹிஜ்ரத். பெருமானாரின் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒவ்வொரு அசைவிலும் ஏராளமான பாடங்கள் உள்ளன. அது போல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் செய்த ஹிஜ்ரத்திலும் மனிதர்களுக்கு ஏராளமான படிப்பினைகள் உள்ளன.
யத்ரிப்(மதீனா)வுக்கு ஹிஜ்ரத் செய்யுமாறு இறைவனின் கட்டளை வந்ததும் நான் இறைவனின் தூதர் எனவே புறப்படுகிறேன் என்று புறப்பட்டு விடவில்லை. திட்டம் இடாமலோ, தனித்தோ, யாருடைய உதவியையும் நாடாமலும் புறப்பட்டு விடவில்லை. முறையாகவும் செம்மையாகவும் திட்டமிட்டார்கள். மனிதர்களிடமிருந்து தேவையான உதவிகளையும் பெற்றார்கள். மனித மனதில் பல காட்சிகளை வரைய மூல ஊற்றாக அமைந்த, அமையும் இந்நிகழ்வு கவலையையும், மனவெழுச்சிகளையும் தூண்டும் பல நிகழ்வுகளாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. அந்நிகழ்வில் தௌர் குகை நிகழ்வு மிகுந்த மனவெழுச்சியைத் தூண்டக் கூடியது என்பதில் சந்தேகமில்லை. சிலந்தி குகை வாயிலில் வலைபின்னுகிறது. புறா அங்கே கூடு கட்டுகிறது. விரட்டுவோரை வழிதவறச் செய்யும் நிகழ்வுகளாக இவை அமைந்து விடுகின்றன. இறுதிமுடிவை தீர்மானிக்கும் அந்தச் சில நிமிடங்களின்போது இறைதூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர் அபூபக்கர் (ரழி) அவர்களுக்கு அப்பிரமிக்கச் செய்யும் ஆச்சரியமான வார்த்தைகளைக் கூறுகிறார்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹிஜ்ரத் இஸ்லாமிய வரலாற்றில் மாபெரும் ஓர் திருப்பு முனையாக அமைந்துள்ளது போன்று, அவர்களின் வாழ்க்கை முறையும் மனித சமுதாயத்திற்கு ஒரு வழி காட்டலாக அமைந்திருப்பதை நாம் அறிந்திருந்தும் நமது வாழ்வை இஸ்லாமிய நெறிகளின் பால் செலுத்தி சீர்படும் எண்ணத்துடன் அதை வரவேற்பதில் தான் உண்மையான புத்தாண்டின் மகிழ்வு அமைந்திருக்கிறது. வல்ல நாயன் நல்லதோர் திருப்புமுனையை நமது வாழ்விலும் நல்கி, நலம் பல பெற அருள் புரிவானாக!
ஹிஜ்ரத் எதார்த்தமாக நடந்த நிகழ்வல்ல!அது ஒரு திட்டமிட்ட பயணம். முதல் வஹ்யின் தாக்கம் நபி (ஸல்) அவர்களை உடல் ரீதியாகவும் மனரீதியாக்கவும் பலகீனப்படுத்தியபோது அன்னை கதீஜா ரலி அவர்கள் பெருமானாரை வேதம் படித்த பெரியவரான வரகாவிடம் அழைத்துச் செல்கிறார்கள். வரகா: நீங்கள் பயப்படத்தேவையில்லை.உங்களை சந்தித்தது நபி மூஸா அலை அவர்களை சந்தித்த ஜிப்ரயீல் தான்,என்று சொல்லியதோடு இந்த மக்கள் உங்களை இந்த ஊரிலிருந்து வெளியேற்றும் போது நான் உயிருடன் இருந்தால் உங்களுக்கு உதவி செய்வேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவர்கள் என்னை வெளியேற்றுவார்களா? என ஆச்சரியமாக கேட்டபோது ஆம் என்று வரகா பதில் சொன்னார்கள். நபித்துவத்தின் ஆரம்பத்திலேயே ஹிஜ்ரத்திற்கான முன்னறிவிப்பு செய்யப்பட்டுவிட்டது. மதீனாவில் யூதர்கள் குடியேர ஆரம்பித்ததே இறுதி நபியின் ஹிஜ்ரத் பூமி இது என்று தங்களின் வேதத்தின் மூலம் தெரிந்துகொண்ட பின்தான் என வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர்.
நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் பயணத்தின் நிறைவில் மதீனாவில் அபூ அய்யூப் அல் அன்ஸாரி ரலி அவர்களின் வீட்டில் தங்கினார்கள். இது குறித்து சில வரலாற்றாசியர்கள் நபிக்கு தங்குவதற்கு அபூ அய்யூப் ரலி இடம் கொடுத்தார் என்று எழுதுவர். அது முற்றிலும் தவறு, உண்மை என்ன தெரியுமா? அபூ அய்யூப் ரலி அவர்கள் தங்குவதற்கு நாயகம் வீடு கொடுத்தார்கள். ஆச்சரியமாக இருக்கிறதா? உச்சந்தலைக்கும் உள்ளங்காலுக்கும் முடிச்சு போட முடியுமா? அது சாத்தியமில்லை என்று உலகம் சொல்லும் அது சத்திமானது என்று இஸ்லாம் சொல்கிறது. கி.மு. 4-ம் நூற்றாண்டில் நடந்த ஒரு நிகழ்வுக்கும் ஹிஜ்ரத்துக்கும் ஒரு பெரிய தொடர்பு உண்டு. இந்த உண்மையை விளங்கினால் ஹிஜ்ரத் சந்தர்ப்ப பயணமல்ல சரித்திரபயணம் என்பதை விளங்கிக்கொள்ளலாம்.
நன்றி: warasathulanbiya.blogspot.com 



No comments:

Post a Comment